தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமை மைந்தனே - உலகு எழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே
1. உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்க மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கோடி மென் கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத் துணையே
2. துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங்
கணையும் கறுப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
3. அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே வெருவிப்
பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாது கரும நெஞ்சான்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாகிய மனிதரையே
4. மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
5. பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே
6. சென்னியது உன் பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே
7. ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்வு இலதோர்
கதியுருவண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுருவேணி மகிழ்ணனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே
8. சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை எல்லாம்
வந்தறி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கம்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
9. கருத்தன எந்தைதன் கண்ணான வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேர் அருள்கூர்
திருத்த பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என்முன் நிற்கவே
10. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே
11. ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வான் அந்தமான வடிவு உடையாள் மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே
12. கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே
13. பூத்தவளே புவனம் பதிநான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கரைக்கண்டானுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே?
14. வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுக நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே
15. தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ?
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
16. கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே
17. அதிசயமான வடிவு உடியாயால் அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் தம்
மதி சயம் ஆக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே?
18. வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளி நிற்கவே
19. வெளிநின்ற நின்திருமேனியை பார்த்து என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைக்கண்டது இல்லை கருத்தினுள்ளே
தெளிந்நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
20. உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே
21. மங்கலை செங்கலசம்முலையாள் மலையாள் வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமையில் தாவு கங்கை
பொங்கு அலை தாங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே
22. கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே
23. கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம்தன்னை விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளியே என் கண்மணியே
24. மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே
25. பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயந்துகொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே? உனை இனி யான் மறவாமல் நின்று ஏத்துவனே
26. ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மனம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே
27. உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே
28. சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே
29. சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகித்திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும் வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே
30. அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய் கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செய்யினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரை ஏற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே
31. உமையும் உமையோருபாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதர்க்குச்
சமயங்களும் இல்லை ஈன்றேடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே